கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூர் காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று மாலை சித்ரா கடைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்ற போது 17 வயது சிறுவன் அவரை கேலி செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சித்ரா தனது கணவரிடம் கூறினார். இதனையடுத்து விஜயகுமார் அந்த சிறுவனை சந்தித்து எனது மனைவியை ஏன் கிண்டல் செய்தாய்? என தட்டி கேட்டுள்ளார். மேலும் சிறுவனின் கழுத்தில் கத்தியால் கீறியதாகவும் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரின் கழுத்தில் குத்தியதால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் விஜயகுமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.