சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் வினோத்குமார் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பியம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் நிலத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அவரிடம் இருந்து போலீஸ் ஏட்டு வினோத்குமார் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார்.

இதனையடுத்து வினோத்குமார் அடிக்கடி செல்போன் மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவரது செல்போன் எண்ணிற்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனை பார்த்த இளம்பெண்ணின் கணவர் போலீஸ் ஏட்டு வினோத்குமாருக்கு வீட்டிற்கு வருமாறு செல்போனுக்கு பதில் குறுந்தகவல் அனுப்பினார். அதனை பார்த்து மகிழ்ச்சியடைந்த வினோத்குமார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இளம்பெண்ணின் கணவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுகுறித்து அறிந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் போலீஸ் ஏட்டு வினோத்குமார் இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனால் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் வினோத்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.