திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் பெயிண்டரான சதீஷ்குமார்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபுராபீவி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் சதீஷ்குமார் தனது மனைவியை பொன்மலை பகுதியில் இருக்கும் ரயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் சதீஷ்குமார் தனது மனைவியை கீழே தள்ளி சேலையால் கழுத்தை இறுக்கியுள்ளார். பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சபுராபீவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் சபுரா பீவியை கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.