புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணாநகரில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. அதில் ஒரு கடையில் 4 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தி, பீர்பாட்டில், உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனை பார்த்ததும் 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் காயமடைந்த பிரவீன்குமார் என்பவரை போலீசார் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.