கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மபுரம் மேற்கு பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்கள் வீட்டின் தரைத்தளத்தில் ஆவின் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். நேற்று அதிகாலை சம்பூரணம் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றனர்.

அதில் ஒரு வாலிபர் சம்பூர்ணத்திடம் பால் பாக்கெட் வேண்டும் என கேட்டார். அதனை எடுக்க சம்பூர்ணம் திரும்பியபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அவரை கீழே தள்ளினார். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சம்பூர்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை திருடி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.