சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி குமரன் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் எனது நண்பர் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்.

அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு பணம் கிடைக்கும் என கூறினார். இதனை நம்பி அவரிடம் 47 லட்ச ரூபாய் வரை கொடுத்தேன். இதனையடுத்து 22 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து மீதமுள்ள 23 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் போலீஸ் ஏட்டை தேடி வருகின்றனர்.