கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்சபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து அவர் தேசிய கொடி ஏற்றி ரிப்பன் வெட்டி ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.

இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி மாணவ, மாணவிகள் மத்தியில் பேசியதாவது, யார் வேண்டும் என்றாலும் அறிவுடையவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஒருவருக்கு நல்ல குணம் இல்லை என்றால் அதிக திறமை இருந்தாலும் அது வீண் தான். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம்.

பெற்றோருக்கு பிறகு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தான் முக்கியமானவர்கள். எனவே ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என பேசினார். இதனைத் தொடர்ந்து யார் எல்லாம் போலீசாக விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு பெரும்பாலான மாணவர்கள் கைகளை உயர்த்தினார்கள்.

அப்போது நன்றாக படித்தால் தான் போலீஸ் அதிகாரிகளாக ஆக முடியும் என கூறி எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் வரும் நல்ல, நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற பாடலை ராகத்துடன் பாடி அசத்தினார். அதை மாணவர்கள் திரும்பி பாடினர். மேலும் சினிமா பாடலை பாடி போலீஸ் அதிகாரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.