திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் நாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பள்ளியின் 4-ஆம் வகுப்பு 5-ஆம் வகுப்பு உட்பட நான்கு வகுப்புகளில் இருக்கும் சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக நள்ளிரவில் பள்ளியின் மேற்கூரை விழுந்ததால் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை. மறுநாள் காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியர்கள் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக படிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.