நடிகர் ஷாருக்கானின் மன்னத் எனும் பெயரிடப்பட்ட பங்களாவின் 3வது தளத்தில் அவரது மேக்-அப் அறை இருக்கிறது. இந்த அறைக்குள் நுழைந்த வாலிபர்கள் 2 பேர் மறைவாக பதுங்கி இருந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு பங்களாவில் நுழைந்த அவர்கள் காலை 10.30 மணி வரை காத்திருந்துள்ளனர் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து ஷாருக்கானின் மேலாளரான கல்லீன் டிசோசா காவல்துறையினரிடம் கூறியதாவது, பாதுகாவலர் என்னை தொடர்புகொண்டு 2 பேர் பங்களாவுக்குள் நுழைந்தனர் என்று தெரிவித்தனர்.

அதன்பின் சதீஷ் என்ற வீட்டு பணியாளர் இருவரையும் பார்த்து அவர்களை அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரையும் பார்த்து ஷாருக்கான் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனை தொடர்ந்து 2 பேரும் பாந்திரா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என எப்ஐஆர் தெரிவிக்கிறது. அவர்கள் பதான் சாஹில் சலீம்கான் மற்றும் ராம்சரப் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குஜராத்தின் பரூச் நகரை சேர்ந்த அவர்கள் ஷாருக்கானை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோம் என காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளனர்.