உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் விலையுயர்ந்த லம்போர்கினி கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், தனது மகன் மது அருந்தவில்லை என்றும் அவர் காரை ஓட்டவில்லை என்றும் புகையிலை தொழிலதிபர் கே.கே.மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கான்பூரின் விஐபி சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை, கார் விபத்தின்போது தொழிலதிபர் மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராதான் காரை ஓட்டினார் என்பதை சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகள் மூலம் உறுதி செய்துள்ளதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

ஆனால் இதனை மறுத்துள்ள அவரது தந்தை மிஸ்ரா, தனது குடும்பத்தில் யாருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லை என்றும், விபத்தின்போது சிவம் மிஸ்ரா மயக்க நிலையில் இருந்ததால் ஓட்டுநர்தான் காரை இயக்கினார் என்றும் காவல்துறையின் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையினருக்கும் தொழிலதிபர் குடும்பத்தினருக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வரும் நிலையில், லம்போர்கினி காரைப் பறிமுதல் செய்துள்ள கான்பூர் காவல்துறை ஆணையர் ரகுபீர் லால், சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.