தமிழக முதல்வர் ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பணி என்னும் அரிய வாய்ப்பை பெற்றுள்ள நம்மில் பலரும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான். எனவே நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

நம்ம ஸ்கூல் இணையதளமான https://nammaschools.tnschools.gov.in என்ற முகவரிக்குள் சென்று முன்னாள் மாணவர் என்ற பதிவு செய்யும் பொத்தானை அழுத்தினால் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் படித்த பள்ளியை தேர்வு செய்து முன்னாள் மாணவர்களையும் அதில் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக தனி வாட்ஸ் அப் குழுவையும் உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் நாம் அனைவரும் இணைந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் மாறி அரச பள்ளிகளாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.