சேலம் மாவட்டம், மேச்சேரி காமராஜர் பேட்டையைச் சேர்ந்த சவுண்டப்பன் என்ற நெசவாளரின் 24 வயது மகன் தினேஷ் குமார், சென்னையில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த19ம் தேதி அவர் ஒட்டி சென்ற இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது பெற்றோரின் சம்மதத்துடன் தினேஷ் குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பின் அவரது  உடல் மேச்சேரி நெசவாளர் காலனிக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ, சப்-கலெக்டர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, டிஎஸ்பி மாரிமுத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, அரசு மரியாதையுடன் அருகில் உள்ள மயானத்தில் தினேஷ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.