பஹல்காம் பகுதியில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, கடந்த மே மாதம் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டதை அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார். லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியப் படைகள் தாக்குதலைத் தொடங்கியபோது ராணுவச் செயலாளர் தன்னை பதுங்கு குழியில் சென்று மறைந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும், ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி ஷேஷ் பால் வைத், இந்த ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், 11 விமானப்படைத் தளங்கள் மற்றும் 19 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதை இந்தியா ஏற்கனவே உறுதி செய்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் தலைமையும் அதனை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாரும் ராவல்பிண்டியில் உள்ள விமானப்படைத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதைச் சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.