கர்நாடக மாநிலம் எல்லாப்பூர் பகுதியில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் ஒருவரை அவரது பள்ளிப்பருவ நண்பரே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஞ்சிதா பானசோடே என்ற 30 வயது பெண்மணி, 12 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், 10 வயதில் அவருக்கு ஒரு மகன் உள்ளார்.

சில தனிப்பட்ட காரணங்களால் கணவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்த ரஞ்சிதா, அரசுப் பள்ளியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். ரஞ்சிதாவின் பள்ளித் தோழரான ரபீக் இமாம்சாபா என்பவர், ரஞ்சிதாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து உணவு அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ரபீக் வற்புறுத்திய நிலையில், ரஞ்சிதாவும் அவரது குடும்பத்தினரும் அதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரபீக், ரஞ்சிதா வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது மறைந்திருந்து தாக்கி கூர்மையான ஆயுதத்தால் அவரைக் குத்தினார். இதில் படுகாயமடைந்த ரஞ்சிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான ரபீக், அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலுக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் கயிறுகள் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள உத்தர கன்னடா மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நடந்த இந்த இரட்டைக் கொலை மற்றும் தற்கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.