திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை இளங்கோவடிகள் வீதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே முருகன் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் முருகன் வெள்ளியங்கிரி மலை ஏறுவது வழக்கம். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முருகன் நண்பர்கள் மற்றும் உறவினரான கண்ணன் ஆகியோருடன் மலை ஏற தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது மலை ஏறிக்கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்த முருகனை உடனடியாக மலை அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் டாக்டர்கள் பரிசோதனை செய்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.