காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தீபக் நண்பர்களான ரூபேஷ், கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோர் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரை தாண்டி எதிர்ப்புறம் சென்ற ஆம்னி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ரூபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயம் அடைந்த தீபக், கோகுல்நாத், ரோகித், நவீன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீபக் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.