சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் காலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்து போனவரின் உடலை சாலை ஓரத்தில் வைத்து மக்கள் இறுதி அஞ்சலி சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் கூட்டத்திற்குள் பாய்ந்தது.

இதில் அங்கு நின்று கொண்டிருந்த பலரும் தூக்கி வீசப்பட்டனர். பலர் லாரி சக்கரங்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.