சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த நாய்க்குட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலம் பாதிப்படைந்துள்ளது. இதனையடுத்து அதற்கான சிகிச்சையளித்தும் பலனின்றி அந்த நாய் உயிரிழந்து விட்டது.

இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த ரிச்சா தனது நண்பர்களிடத்தில் இது குறித்து வருத்தத்துடன் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த ரிச்சா நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் உள்ளே சென்று பார்த்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.