திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பழனி காமராஜர் வீதியில் வசித்த ராஜாமுகமது(57) என்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான ராஜா தி.மு.கவில் விவசாய அணி துணை அமைப்பாளராக இருந்துள்ளார். இவருக்கு ஜாபர் நிஷா(54), என்ற மனைவியும் மும்தாஜ்(29) என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் உடல் நல பாதிப்பால் அவதிப்பட்ட தனது மனைவி மற்றும் மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ராஜா தவித்து வந்துள்ளார். இதனால் வாழ்க்கையை வெறுத்த ராஜா திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.