புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஓடிசா முதல் டெல்லி வரை First AC வகுப்பில் பயணித்த ஒரு குடும்பம், ரயில்வே தரும் படுக்கை உபகரணங்களை திருட முயன்றதையடுத்து, வீடியோவில் பிடிபட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

X-இல் பயனர் பாபி சாஹூ பகிர்ந்த வீடியோவில், ஒரு பெண்ணும் இரு ஆண்களும் கொண்ட குடும்பம், இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களால் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களது பைகளில் ரயில்வே வழங்கிய பேட்சீட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு, நேரில் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் எந்த ஸ்டேஷனில் நிகழ்ந்தது என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ரயில்வே தரப்பில், பயணிகள் பயண முடிவில் பேட்சீட்கள், தலையணை உள்ளிட்ட உபகரணங்களை திருப்பி அளிக்க வேண்டியது கட்டாயம் எனவும், இவற்றை வைத்துக்கொள்வது அரசின் சொத்தை திருடுவது போன்ற குற்றமாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேச் சட்டம், 1966ன் பிரிவு 3-ன் படி, இது ஒரு குற்றமாக வகுக்கப்படும்; முதல் தடவைக்கு ஒரு வருட சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மீண்டும் செய்யும் குற்றங்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை சிறைதண்டனை மற்றும் கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.