ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் நகரில் சமீபத்தில் நடந்த ஒரு கொடூரச் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தான் கண்டெடுத்த தானியங்களை மற்ற புறாக்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமில்லாத ஆவேசத்தில் இருந்த 8 வயது சிறுவன் ஒருவன், பறவையின் தலையை சற்றும் தயக்கமின்றி தன்கையால் கழற்றி எறிந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

சம்பவத்தை நேரில் கண்டவர்கள், அந்தச் சிறுவன் கோபத்தில் இருந்ததாகவும், புறா அருகில் வந்தவுடன், சற்றும் யோசிக்காமல் அதன் தலையை முறித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளனர். ஆனால், மக்களை உண்மையில் உலுக்கியது என்னவென்றால், அந்தச் சிறுவன் அதன்பிறகு சாதாரணமாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கி, தான் செய்தது ஒரு விபரீதச் செயல் போல நடந்துகொள்ளாமல் இருந்ததாகும். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியானதும், “வருங்கால சைக்கோ தொடர் கொலையாளி”, “முற்றிலும் மனநோய் கொண்டவன்” என்று நெட்டிசன்கள் பலரும் ஆத்திரத்துடன் கருத்துகளைப் பதிவுசெய்தனர்.

இதையடுத்து, குழந்தை நல அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தீவிரக் கோரிக்கை எழுந்துள்ளது. இப்படி ஒரு வன்முறையைச் செய்யும் அளவிற்கு அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று அண்டை வீட்டாரும், நிபுணர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிறுவனுக்குச் சரியான வழிகாட்டுதல் அளித்தால், எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில், அவனுக்கு உளவியல் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.