தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. திமுக அரசின் இரண்டு வருட சாதனைகளை விளக்கும் கண்காட்சியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசு 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு தன்னுடைய twitter பக்கத்தில் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், அவர்தம் அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பை என் வாழ்வில் கிடைத்த மதிப்பான வெகுமதியாகவும், மனநிறைவை வழங்கும் அனுபவமாகவும் எண்ணுகிறேன். இந்த ஆட்சி அடைந்துள்ள வெற்றிகளை எடுத்துரைத்தாலும், இந்த தருணத்தில் எனது தலைவருக்கு நன்றி தெரிவிக்கவே கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் உன்னதமான சமத்துவ சமூகத்தை படைக்க வேண்டும் என்கிற கழகத்தின் லட்சியத்தை முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே செயல் வடிவம் பெறுகிறது என்று கூறியுள்ளார்.