
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து “femi 9″நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதன் 2025 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விற்பனையை அதிகரிக்க முகவர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா சிறப்புரையாற்றினார்.
இதில் அவர் பேசிய போது,”என் வாழ்க்கையில நான் ரொம்ப நம்புகிற இரண்டே விஷயம் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை ஆகும். இந்த ரெண்டும் இருந்தால் வாழ்க்கை அழகானதாக மாறும். இவை இரண்டையும் என்ன நடந்தாலும், யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் நமது வாழ்க்கையில் இருந்து விட்டுவிடவே கூடாது என நான் நம்புகிறேன். இதை நீங்களும் கடைப்பிடித்தால் வாழ்க்கை அழகானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
நமக்கு நம் மேல் நம்பிக்கையும், மரியாதையும் இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் நமது கடமைகளை நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் செய்து முடிக்க வேண்டும். அதற்காக யார் என்ன சொன்னாலும் ,எவ்வளவு கீழ் தரமாக பேசினாலும் நம்மிடம் தவறாக நடக்க முயற்சித்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. உண்மையும், உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இவ்வாறு கூறினார்.