நீலகிரி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் அக்ரி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தி, 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா குன்னூரில் உள்ள உபாசி என்ற அரங்கில் நடந்தது.

இதற்கு நீலகிரி மாவட்ட  ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கி, இதை தொடங்கி வைத்தார். பின் அவர் விவசாயிகளுக்கு தேயிலை எந்திரங்களை வழங்கினார். இதையடுத்து அவர் பேசியுள்ளதாவது, ‘ஸ்மார்ட் அக்ரி’ திட்டத்தின் மூலம் மண்ணின் தரம், பூச்சி தடுப்பு மேலாண்மை மற்றும் அனைத்து காரணிகள் பற்றிய நுண்ணறிவு விவசாயிகளுக்கு வழங்கி, உலகளவில் நிலவும் வர்த்தக போட்டிக்கு விவசாயிகளை தயார்படுத்தி கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். இவ்விழாவில் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், தாசில்தார் சிவக்குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.