சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல் அமைக்கும் பணியில் சீனிவாசனும், அரவிந்த் குமார்(25) என்பவரும் ஈடுபட்டுள்ளனர். அப்போது பந்தல் போடுவதற்காக கம்பியை உயர்த்திய போது அருகில் சென்ற மின் கம்பியின் மீது உரசியதால் 2 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

மேலும் சீனிவாசன் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.