தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் விஜயநகரம் காட்டுவளவு பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கடையுடன் கூடிய புதிய வீடு கட்டியுள்ளார். தனது வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே இளவரசன் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் உள்ளிட்ட அலுவலர்களுக்கு உதவியாளராக வேலை பார்க்கும் வெங்கடாசலம் என்பவர் தடையில்லா சான்று வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து இளவரசன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடாவிய ரூபாய் நோட்டுகளை இளவரசன் வெங்கடாசலத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடாசலத்தை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.