பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இதனிடையே நவாசுதீன் சித்திக் மற்றும் இவரது மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது.

துபாயில் படிக்கும் தன் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக தன் தரப்பிலிருந்து சப்னா என்ற இளம் பெண்ணை வேலைக்காக அனுப்பி வைத்தார் நவாசுதீன் சித்திக். இந்த பெண் தனக்கு சம்பளம் எதுவும் வழங்காமல் துபாயில் தன்னை அனாதையாக தவிக்கவிட்டதாக அண்மையில் பேசிய ஒரு வீடியோ வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அவரது முன்னாள் மனைவி ஆலியாவை தனக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழையக் கூடாது என அவர் தடை உத்தரவு போட்டதும், அதனால் அவரது குழந்தைகளுடன் வீட்டு வாசலிலேயே நின்றிருந்த நிகழ்வும் பாலிவுட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் தன் முன்னாள் மனைவி மற்றும் என் சகோதரர் தனக்கு எதிரான தகவல்களை பொதுவெளியில் பேசி தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதாக கூறி இருவர் மீதும் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் நவாசுதீன் சித்திக். இவ்வழக்கு நாளை மார்ச் 30-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.