திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூரில் பழனிவேல்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா(42) என்ற மனைவியும், தருண் ராஜ்(19) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அந்த காரை விக்கி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று அதிகாலை புவனகிரி வண்டுராயன்பட்டு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பரிமளாவும், தருண் ராஜும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனிவேல், விக்கி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மற்றும் மகனின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.