திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் ராமலிங்க நகரில் சடகோபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(85) என்ற மனைவி உள்ளார். கணவரும் மகன்களும் இறந்ததால் சாந்தா தனியாக வசித்து வந்தார். அவரது வங்கி கணக்கில் 90 லட்சம் பணம் இருந்தது. இந்நிலையில் சாந்தாவின் சகோதரர் மகள், மகன் ஆகியோர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து தனியார் வங்கி கணக்கு அந்த பணத்தை மாற்றினால் கூடுதல் தொகை வட்டியாக கிடைக்கும் என தெரிவித்தனர். இதனை நம்பி சாந்தா வங்கி கணக்கை மாற்ற ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து அவர்கள் போலியான கையெழுத்தை போட்டு பணத்தை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி ஏடிஎம் கார்டு மூலம் பல்வேறு தவணைகளாக 19 லட்சத்து 99 ஆயிரத்து 994 பணத்தை எடுத்தனர். மேலும் லாக்கரில் இருந்த 62 பவுன் தங்க நகைகளையும் எடுத்துள்ளனர். இவ்வாறாக மொத்தம் நகை, பணம் என 1 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 997 ரூபாய் பணத்தை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சாந்தா உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.