கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி திருமுருகன் நகரில் மாலதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலம் கிளின்டன் என்ற நபர் எனக்கு அறிமுகமானார். அவர் லண்டனில் இருப்பதாகவும் பி.எம் டபிள்யூ கார் சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இந்தியா வர இருப்பதாகவும், விலை உயர்ந்த தங்க நகைகளை பார்சலில் எனக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு விமானத்தில் எனக்கு பார்சல் வந்திருப்பதாகவும், அதனை 32 ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதனையடுத்து பார்சலில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் இருப்பதால் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என அவர்கள் கூறியதை நம்பி எனது நகைகளை விற்று மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.