சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி கந்தன் சாவடி பகுதியில் முத்தர் என்பவர் வசித்து வருகிறார் . இவர் கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் இருக்கும் வங்கியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்த அப்சனா என்பவர் 45 லட்ச ரூபாயை வாங்கி கொண்டு அதற்கான ரசீதை முதியவரிடம் கொடுத்து, எந்த தகவல் வேண்டுமென்றாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணையும் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக முதியவர் வங்கி உதவி மேலாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் அளிக்கவில்லை இதனால் முதியவர் நேரில் சென்று வங்கி மேலாளர் முரளி என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அப்சனா கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்றதாக முரளி தெரிவித்துள்ளார். அதே சமயம் முத்தர் கொடுத்த 45 லட்சம் பணத்தை டெபாசிட் செய்யாமல் அப்சனா தனது வங்கி கணக்கில் செலுத்தியதும் உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் அப்சனாவை தீவிரமாக தேடி வருகின்றனர்