திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் எம்.எஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி. இந்த நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 28 பேரிடம் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மீனாட்சி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது திருச்சி மணப்பாறையை சேர்ந்த ராஜமணிகண்டன் என்பவர் மீனாட்சியும், பாலகிருஷ்ணனும் வேலைக்கு அனுப்புவதாக கூறி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் மீனாட்சி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.