சுவாமிமலை – கும்பகோணம் இடையே 5-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மாங்குடி, கோணக்கரை, வளையப்பேட்டை வழியாக சுவாமி மலைக்கு செல்வது வழக்கம். மீண்டும் அதே வழித்தடத்தில் கும்பகோணத்திற்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சில நேரங்களில் பஸ்கள் வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் இருந்து விலகி மாற்று வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

இதனால் வளையப்பேட்டை, மாங்குடி, கோணக்கரை வழித்தடங்களில் உள்ள கிராமங்களில் இருந்து கும்பகோணத்திற்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம்  பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். அதனால் கிராம மக்கள் பயனடையும் விதமாக மினி பஸ்களை அதற்குரிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.