கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த 4-வது நாளில் நாகலட்சுமியின் மகள் அஸ்வினி, தேவி ஆகியோர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் துணி கடைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

இதனையடுத்து தேவி கழிப்பறைக்கு சென்று விட்டு வருவதாக அஸ்வினியிடம் கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அஸ்வினி தனது தாய் மற்றும் விக்னேஸ்வரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து தேவியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனாலும் தேவியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தேவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.