கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டைக்காடு புதிய காலனி பகுதியில் அருண்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் செருப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் மகளான பாலகார்த்திகா(27) என்ற பெண்ணை அருண்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று வாக்குவாதம் முற்றிய போது அருண்குமார் தனது மனைவியிடம் திருமணத்தின் போது நீ என்ன நகை கொண்டு வந்தாய்? என கேட்டு மனைவி, பிள்ளைகளை வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் பாலகார்த்திகா தனது குழந்தைகளுடன் நாகர்கோவிலில் இருக்கும் தாய் சாருமதியின் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் நீண்ட நேரமாகியும் அருண்குமாரின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை.

மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக உரிமையாளர் பாலகார்த்திகாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலகார்த்திகா தனது தாயுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது குளியல் அறையில் அருண்குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண்குமாரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.