திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது மகள் மீது பெட்ரோலை தெளித்துவிட்டு தனது உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கன்னிவாடியை சேர்ந்த வீரமணியின் மனைவி ஜெயந்தி மாலா என்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜெயந்தி மாலா கூறியதாவது, குடிநீர் பிரச்சினைக்காக எனது கணவர் பொதுமக்களுடன் இணைந்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அரசியல் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் எனது கணவர் மீது போலீசார் பொய் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எனது மகளுடன் தற்கொலைக்கு முயன்றேன் என ஜெயந்தி மாலா தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவரை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.