திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து ஓலையூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருச்சி பாரதியார் சாலையில் இருக்கும் பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றவுடன் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்குமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் டிரைவர் பேருந்தை ஜங்ஷன் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ரயில் நிலைய 2-வது நுழைவு வாயில் முன்பு இரும்பு தடுப்புகள் போடப்பட்டிருந்தது.

அந்த தடுப்புகளை கடந்து பேருந்து சென்றபோது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் புத்தக பை இரும்பு தடுப்பில் சிக்கியது. உடனே இரும்பு தடுப்பு அருகில் நின்று கொண்டிருந்த கொளஞ்சி(55) என்ற பெண் மீது விழுந்தது. இதனால் அவரது இடது கை சுண்டு விரல் துண்டானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கொளஞ்சியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு பேருந்து டிரைவர் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.