திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் 7 ரோடு பகுதியில் தனியார் நட்சத்திர கிளப் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக சமையல் கலைஞர்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிளப் நிறுவன பணியாளர்கள் உணவு சாப்பிட்டபோது குழம்பில் சிவப்பு நிறத்தில் திரவம் மிதந்தது. அதனை சாப்பிட்ட பணியாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சமையல் கலைஞராக வேலை பார்க்கும் மலர்விழி என்பவர் வேண்டுமென்றே வலி நிவாரண மருந்தை குழம்பில் கலந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மலர்விழி மீதமான உணவை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக பணியாளர்கள் கிளப் மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் மலர்விழி வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டு மலர்விழி குழம்பில் வலி நிவாரண மருந்தை கலந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.