தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பெண்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, சிவசுப்பிரமணியபுரத்தில் இருக்கும் கோவில் இடத்தை சிலருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர். அந்த இடத்தை மீட்க வேண்டும்.

அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில்  ஈடுபட்டதாக கூறியுள்ளனர். மேலும் பலமுறை இது தொடர்பாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்தால் தான் எழுந்து செல்வோம் என கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் மட்டும் மனு கொடுக்க செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.