IPL கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் மார்ச் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டது. அப்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் – தவான் போன்றோர் களமிறங்கினர். இதில் சூப்பராக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து ராஜபக்சா தவான் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக 10 ஓவரில் பஞ்சாப் அணியானது 100 ரன்களை எடுத்தது.

32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து குவித்து ராஜபக்சே அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் சிறிது நேரத்தில் தவான் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியில் பஞ்சாப் அணியானது 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதனால் 20 ஓவர்களில் 192 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கியது கொல்கத்தா அணி. அதன்படி மண்தீப் சிங் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் தொடக்க வீரர்களாக விளையாடினர்.

அப்போது மந்தீப் சிங் 4 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் ரஹமனுல்லா 3 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க கொல்கத்தா அணிக்கு எதிர்பார்த்த ஓபனிங் கிடைக்கவில்லை. அதனைதொடர்ந்து 16 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த கொல்கத்தா அணியானது 146 ரன்களை எடுத்திருந்தது. கொல்கத்தா 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் சூழலில், மழை குறுக்கிட்டதையடுத்து ஆட்டம் தடைப்பட்டது. மேலும் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் கிங்ஸ் அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.