ஹைதராபாத் மகபூப்நகர் மாவட்டம் படேபள்ளி பகுதியை சேர்ந்த பெண்ணை, நபர் ஒருவர் ஆபாசமாக போட்டோ எடுப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், ஜலாலுதீன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி, ராமுலு, சங்கர், ராமுலு நாயக் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின் கைதான 4 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதாவது, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 18 வயது முதல் 30 வயது வரையுள்ள பெண்களை குறிவைக்கும் இந்த கும்பல், அவர்களை கோடீஸ்வரியாக மாற்றுவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

அதில் முக்கிய குற்றவாளியான ஹைதராபாத்தை சேர்ந்த திருப்பதி, பெரும்பாலான பெண்களை அணுகி அவர்களிடம் உங்களது கைரேகை, அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அதை ஒரு சாமியாருக்கு அனுப்புவேன். அந்த சாமியார் உங்களது உடலில் இருக்கும் மச்சத்தை பார்த்து, பணம் சம்பாதிக்கும் வழியை கூறுவார் என தெரிவித்துள்ளார்.

இதை உண்மை என நம்பிய பெண்கள் திருப்பதியிடம் தங்களது அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவான திருப்பதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதோடு பெண்களின் அந்தரங்க படங்களை அவர் என்ன செய்தார்? அந்த சாமியார் யார்? என்பது பற்றி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.