சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் படி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர் என நடிகை அபிராமி தெரிவித்து உள்ளார். இதுபற்றி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “நானும் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி தான். பொதுவாக எந்த ஒரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலேயே குரல் கொடுப்பேன். கலாஷேத்ரா பற்றி சோஷியல் மீடியாவில் பரவும் தகவல்களால் வேதனை அடைந்தேன். இவ்விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகின்றனர். அதே நேரம் ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்” என அவர் கூறினார்.