கேரளா வர்க்கலா செர்னியூரில் வசித்து வரும் லட்சுமி பிரியா(19), கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதன் காரணமாக மனமுடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன் காதலை கைவிடக்கூடாது என்று கூறினார்.

எனினும் லட்சுமி பிரியா தன்னுடன் பேச வேண்டாம் எனவும் மீறி பேசினால் தொலைத்து விடுவதாகவும் முதல் காதலனை எச்சரித்தார். இருப்பினும் முதல் காதலன், பிரியாவை சந்திக்கமுயற்சி செய்தார். இதில் கோபமடைந்த லட்சுமி பிரியா 2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

மேலும் முதல் காதலனை நிர்வாணமாக்கியதோடு சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டனர். அதன்பின் அவரது செல்போனை பறித்துகொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனிடையில் மகனை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடியபோது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து லட்சுமி பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். தற்போது அவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.