பீகார் பூர்ணி மாவட்டத்திலுள்ள டகருவா கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்து உள்ளார். 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல் தன் வீட்டின் அருகே நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பேசி அவரை மட்டும் யாரும் இல்லாத இடத்திற்கு தனியே அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது அச்சிறுமியின் பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வழிந்தது. இதனால் இளைஞர் அங்கிருந்த களிமண் மற்றும் சேற்றைக் கொண்டு சிறுமியின் பிறப்புறுப்பில் தடவி ரத்தம் வழிவதை தடுத்துள்ளார். இதனிடையே சிறுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தாருடன் அவர்கள் இருந்த இடத்திற்கு சென்றபோது அங்கு சிறுமியும் அந்த இளைஞரும் இருப்பது தெரியவந்தது.

சிறுமிக்கு நடந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அமீர் ஜாவித் கூறியிருப்பதாவது “குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளோம். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பின் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளோம். குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக விரிவான விசாரணை துவங்கப்படும்” என கூறினார்.