மேற்காசியப் பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலில் காயமடைந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இடிபாடுகளுக்கு இடையே காயங்களுடன் நெதன்யாகு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஆனால் அந்தப் புகைப்படத்தைச் சோதித்தபோது அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட போலியான படம் என்பது தெரியவந்தது. குறிப்பாக அந்தப் படத்தில் நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற குறைபாடுகள் இருந்ததால் அது திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இத்தகைய மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ஆகியோர் நெதன்யாகு நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நெதன்யாகு புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் முகக்கவசம் அணியாமல் பொதுமக்களுடன் கைகுலுக்கிச் சிரித்துப் பேசியபடி காட்சியளிக்கிறார். மேலும் ஒரு உணவகத்தில் காபி அருந்துவது போன்ற மற்றொரு காணொளியில் தனது கைகளை உயர்த்தித் தனக்கு ஐந்து விரல்கள் மட்டுமே இருப்பதைக் காண்பித்துச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ஏஐ தொழில்நுட்பப் போலிப் படங்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.