சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க முயன்றுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அவர் பாதியிலேயே இறங்கும் போது பாரம் தாங்காமல் கேபிள் வயர் திடீரென அறுந்தது. இதில் நிலைதடுமாறிய அந்த இளைஞர் பாலத்தில் இருந்து நேராகக் கீழே விழுந்தார்.

பயங்கர சத்தத்துடன் வாலிபர் கீழே விழுந்ததைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடி வந்தனர். பலத்த காயமடைந்த அவரை மீட்ட மக்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சினிமா பாணியில் சாகசம் செய்ய ஆசைப்பட்டு, பாதுகாப்பு இன்றி கேபிள் வயரைப் பயன்படுத்தியதே இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.