மும்பையைச் சேர்ந்த ருச்சிகா கட்கர் என்பவர் தனது குடும்பத்துடன் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபதேபூர் சிக்ரிக்குச் சுற்றுலா சென்றார். அங்கு அவரை அணுகிய ராஜா குரேஷி மற்றும் விஸ்வநாத் உபாத்யாய் ஆகிய இரண்டு வழிகாட்டிகள், ஒரு நபருக்கு 50 ரூபாய் மட்டுமே கட்டணம் கொண்ட நுழைவுச் சீட்டை, 300 ரூபாய் என்று கூறி ஏமாற்றிப் பணம் பறித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அங்குள்ள தர்காவில் 5,100 ரூபாய்க்கு ‘சாதர்’ (போர்வை) சாத்தினால்தான் குடும்பத்திற்கு நல்லது என்று கூறி ருச்சிகாவை அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்துவான தங்களுக்கு இதில் விருப்பமில்லை என்று ருச்சிகா கூறியும், விடாமல் மிரட்டி மோசடி செய்துள்ளனர்.

வழிகாட்டிகளின் தொடர் தொந்தரவு மற்றும் கூடுதல் கட்டணத்தால் சந்தேகமடைந்த ருச்சிகா, உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தை அணுகிப் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்ற ஆக்ரா போலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அந்த இரண்டு வழிகாட்டிகளையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ருச்சிகா குடும்பத்தினர் இழந்த மொத்தப் பணத்தையும் போலீஸார் மீட்டுக் கொடுத்தனர்.

“சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; இது போன்ற மோசடிகளால் ஆக்ராவின் நற்பெயருக்குக் களங்கம் வரக் கூடாது” எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். ருச்சிகாவின் துணிச்சலான நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.