தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று பாதிப்பு மார்ச் 15-ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 258 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1.99 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அதன்படி கொரோனா பரிசோதனை, நோயாளிகள் கண்காணிப்பு, கொரோனாவுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் பணி போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொற்று பரவலை தீவிரமாக கண்காணிப்பதோடு, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நோய் தொற்றுகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தமிழகத்தை போன்று, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.