டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மது கடை உரிமங்களை வழங்கி சலுகைகளை அளித்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் அளித்துள்ளது. இதில் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி அவரது அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த ஊழலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் மணி சிசோடியாவின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 19-ஆம் தேதி சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என மணி சிசோடியாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகளை முன்னிட்டு நேரில் ஆஜராக கால அவகாசம் வேண்டும் என சிசோடியா கேட்டிருந்தார். இதன் காரணமாக நேற்று சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சிசோடியாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பியது. இருப்பினும் சிபிஐ அமைப்பின் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் எம் பி சஞ்சய் சிங், சங்கம் விஹார் எம்எல்ஏ தினேஷ் மோனியா, திரிலோக் புரி எம் எல் ஏ  ரோஹித் குமார் மெஹ்ராலியா, கொந்தில் எம்எல்ஏ குல்தீப் சிங், டெல்லி மந்திரி கோபால் ராய் மற்றும் ரோதாஷ் நகர் முன்னாள் எம்எல்ஏ சரிதா சிங் ஆகியோர் சிபிஐ தலைமையகம் அமைந்துள்ள சி.ஜி.ஓ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக போலீசார் 50 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் வரை பாதுகாப்புக்கு குவிப்பது போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் முன்ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என டெல்லி போலீசார்  தெரிவித்துள்ளனர். சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்பு சிபிஐ அமைப்பு சிசோடியாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் போன்றோரை போலீசார் இன்று விடுவித்துள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது, “முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என பாஜக முயற்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சிக்கு ஒரு கெட்ட பெயர் உண்டாக வேண்டும் என மேற்கொள்ளும் பாஜகவின் அனைத்து முயற்சியும் தோல்வியடையும்.

பிரதமர் மோடியின் சர்வாதிகாரத்திற்கு விரைவில் ஒரு முடிவு வரும். நாட்டில் மிகப் பிரபலம் வாய்ந்த கல்வி மந்திரியை அவர் கைது செய்திருக்கின்றனர். விசாரணை முகமைகளை கொண்டு சிசோடியா கைது செய்யப்பட்டு இருப்பது மத்திய அரசின் கோழைத்தனச்செயல். என்னுடன் சிபிஐ அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை இருந்தால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமைச்சர் மற்றும் தொழிலதிபர் அதானியை இரண்டு மணி நேரத்தில் கைது செய்வேன். மேலும் விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தும் அதிகாரம் உங்களிடம் இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்ய முடியும்” என சிங் நிருபர்களிடம் கூறியுள்ளார்.