ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கு எதிராக இந்திய ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும், போட்டி நடந்தபோது, நடுவரின் முடிவால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சூர்யவன்ஷி, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 10வது ஓவரில், தொடக்க ஆட்டக்காரர் மாஸ் சதக்கத் அடித்த பந்தை, பவுண்டரி அருகே நின்றிருந்த நேஹல் வதேரா ஓடிவந்து பிடித்தார். அவர் பவுண்டரி கோட்டைத் தொட்டுவிடுவோம் என்று உணர்ந்து, உடனடியாகப் பந்தை உள்ளே இருந்த நமன் தீருக்கு வீச, அவரும் கேட்சைப் பிடித்தார்.

இது ‘க்ளீன் கேட்ச்’ (Clean Catch) என்று இந்திய வீரர்கள் கொண்டாடியபோது, நடுவர் முடிவை மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார். மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) ‘ரிலே கேட்ச்’ விதிப்படி, பந்தை வீசிய வீரர் (நேஹல் வதேரா), பவுண்டரிக்கு வெளியே இருந்து உள்ளே வந்திருக்க வேண்டும்.

ஆனால், வதேரா உள்ளே வராததால், நடுவர் சதக்கத்தை நாட் அவுட் என்று அறிவித்தார். நடுவரின் இந்த முடிவால் ஆத்திரம் அடைந்த வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட வீரர்கள் கோபத்துடன் நடுவரிடம் சண்டையிட்டனர்.